Saturday, April 09, 2011

அன்னா ஹசாரே வலியுறுத்தும் ஜன்லோக்பால் மசோதா - விளக்கம்

லோக்பால் என்றால் என்ன? அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும், ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்ற அரசு அமைப்பு தான் லோக்பால். பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மீது லோக்பாலிடம் புகார் கொடுக்கலாம். அந்த புகாரை லோக்பால் விசாரித்து, நடவடிக்கை எடுக்கும். லோக்பால் உருவானால், துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊழல் கட்டுப்படுத்தப்படும் என்ற பொது கருத்து நிலவுகிறது. லோக்பாலின் செயல்பாடுகள், அதிகாரங்கள் போன்றவற்றை நிர்ணயிக்கும் சட்டம் தான் லோக்பால் சட்டம்.
இப்போதுள்ள ஊழல் குறித்த சட்டங்கள் எவை? இந்திய தண்டனை சட்டம், 1860 மற்றும் ஊழல் தடுப்பு சட்டம், 1988 ஆகியவை, அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இவற்றின் படி நடவடிக்கை எடுக்க, போலீசோ, வேறு புலனாய்வு துறையோ, மாநில, மத்திய அரசுகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். அரசில் நிர்வாக துறையை பொறுத்தவரை மத்திய புலனாய்வு துறை மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு துறை ஆகிய இரண்டு மட்டுமே, ஊழல் வழக்குகளை கையாள்வதில் பிரதானமாக செயல்படுகின்றன.
லோக்பால் அமைப்பினால் என்ன லாபம்? இது முறையாக நிறுவப்பட்டால், அரசின் சட்டத்துறை மற்றும் நிர்வாகத் துறையின் கலவையாக இருக்கும். புகார்களை பெற்று விசாரணை நடத்துவதில் நிர்வாகத் துறையை போன்றும், தண்டனை கொடுப்பதில் நீதித் துறையை போன்றும் செயல்படும். மக்களின் பிரச்னை, அலைக்கழிப்பு இல்லாமல் ஒரே இடத்தில் தீர்க்கப்படும்.
இதே போல் இந்தியாவில் வேறு அரசு நிறுவனம் உள்ளதா? ஆந்திரா, அசாம், பீகார், சத்திஸ்கர், டில்லி, குஜராத், ஜார்க்கண்ட், அரியானா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்கள், லோக் ஆயுக்தா மற்றும் உபலோக் ஆயுக்தா அமைப்புகளை உருவாக்கியுள்ளன. இவை, மாநில அளவில் லோக்பாலின் வேலைகளை, குறுகிய அளவில், அதிகாரமற்ற நிலையில் செய்து வருகின்றன. இவற்றில் பிரபலமானது, கர்நாடகாவில் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் இயங்கும் லோக் ஆயுக்தா. இது கர்நாடகாவில் அரசியல் பலம் படைத்த பெல்லாரி சகோதரர்களின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டியது.
இந்த சட்டம் எப்போது அமலுக்கு வரும்? கடந்த 1968 முதல், லோக்சபாவில் எட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டு, தகுந்த காலவரைக்குள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தற்போது நிலவும் தொடர் ஊழல் சூழலில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், ஊழலை தடுக்க நடவடிக்கைகள் பரிந்துரைக்க, மத்திய அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதில் லோக்பால் மசோதாவின் வடிவம் மற்றும் அதை மீண்டும் அறிமுகப்படுத்துவது பற்றி பரிந்துரைக்கப்பட்டது. லோக்பால் மசோதாவின் வடிவம் குறித்து போராடி வரும் அன்னா ஹசாரே உட்பட அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டால், இந்த ஆண்டே லோக்சபாவில் நிறைவேற வாய்ப்பு உள்ளது.
அன்னா ஹசாரே உண்ணாவிரதம் ஏன்? தற்போது அரசுக்கு பரிசீலிக்கப்பட்ட லோக்பால் சட்டம் மிகவும் பலவீனமானது. அதன்படி உருவாக்கப்படும் அமைப்புக்கு, பரிந்துரை செய்யும் அதிகாரங்கள் மட்டுமே இருக்கும். இதுவரை வெவ்வேறு அரசு ஆணையங்கள் லோக்பால் குறித்து செய்த பரிந்துரைகளை சேர்த்து, சட்டத்துக்கு வலிமையூட்டும் வகையில், அன்னா ஹசாரே தலைமையில், ஒரு சமூக ஆர்வலர் குழு, மாதிரி மசோதா தயார் செய்திருந்தது. அந்த மாதிரி மசோதாவின் அடிப்படையில் புதிய லோக்பால் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கோரி, அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கின்றார்.
பரிந்துரைக்கப்பட்டுள்ள லோக்பால் மசோதாவில் உள்ள குறைகள்
  • நாட்டின் பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மீது மட்டுமே லஞ்சம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தும் உரிமை கொண்டது.
  • லஞ்சம் தொடர்பான விசாரணையை துவங்கவோ, பொதுமக்களிடம் இருந்து நேரடியாக புகார்களை பெறவோ அதிகாரம் கொடுக்கப்படாது. புகார்களைப் பெறுவதற்கென நியமிக்கப்படும், எம்.பி.,க்கள் மூலமே, அவை பெறப்படலாம்.
  • புகாரில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது; அமைச்சர்கள் மீதான புகார் குறித்து பிரதமரிடமோ, பிரதமர், அமைச்சர்கள் மீதான புகார் குறித்து, புகார்களை பெற நியமிக்கப்பட்டுள்ள எம்.பி.,க்களிடமோ சிபாரிசு மட்டுமே செய்ய முடியும்.
  • காவல் துறைக்கான அதிகாரம், லோக்பால் அமைப்புக்கு கொடுக்கப்படாது. எனவே, எந்த புகார் மீதும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது.
  • லோக்பால் அமைப்பில் தவறான புகார் தெரிவித்தது உறுதி செய்யப்பட்டால், புகார் கொடுத்தவருக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும்.
  • இந்த அமைப்பை நிர்வகிக்க, ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய கமிட்டி ஒன்று உருவாக்கப்படும்.
  • இவர்கள் மூவரும் இணைந்து, லோக்பால் அமைப்புக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பர். உறுப்பினர்கள் அனைவரும், அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாக, குறிப்பாக ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களாக இருப்பர்.
  • நாட்டின் பாதுகாப்பு, ராணுவம், வெளியுறவு தொடர்பாக, பிரதமருக்கு எதிராக புகார் வந்தால், அது குறித்து விசாரிக்க பரிந்துரை செய்ய, இந்த அமைப்புக்கு அதிகாரம் கிடையாது.
  • புகாரின் அடிப்படையில் விசாரணையை ஆறு மாதத்தில் இருந்து ஓராண்டிற்குள் துவக்க வேண்டும். ஆனால், எவ்வளவு மாதங்களில், ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்பது வரையறுக்கப்படவில்லை.
  • லஞ்ச அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறைத் தண்டனை பெற்ற பின்னர் சம்பந்தப்பட்டவர், தவறான வழிகளில் ஈட்டிய சொத்துக்களை அனுபவிப்பதற்கு, இந்த அமைப்பின் மூலம் தடை ஏதும் விதிக்கப்படவில்லை.
அன்னா ஹசாரே வலியுறுத்தும் ஜன் லோக்பால் மாதிரி மசோதா விவரம்
  • அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிபதிகள் மீதும் லஞ்சம் தொடர்பான நீதி விசாரணை நடத்த லோக்பால் கட்டுப்பட்டது. மத்திய ஊழல் கண்காணிப்பு கமிட்டி மற்றும் மத்திய அரசின் அனைத்து கண்காணிப்பு அமைப்புகளும், லோக்பால் அமைப்பிற்குள் கொண்டு வரப்படும்.
  • பொது மக்களிடமிருந்து, புகார்களை நேரடியாகப் பெற்று, நடவடிக்கை எடுக்கலாம். யாரிடமும் சரிபார்க்க வேண்டிய அவசியமோ, அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.
  • புலனாய்வு முடிந்ததும், வழக்கு தொடரலாம்; ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் அல்லது இரண்டையும் மேற்கொள்ளலாம்.
  • லோக்பால் அமைப்புடன் சி.பி.ஐ., இணைக்கப்பட்டு விட்டால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அதிகாரம், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் புலனாய்வு செய்தல், வழக்கு தொடர்தல் ஆகியவை மேற்கொள்ள முடியும்.
  • லோக்பால் அமைப்பில் ஒரு தலைவர், 10 உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பர். இவர்களில் 4 பேருக்கு மட்டுமே முன் அனுபவம் இல்லாத வக்கீல்களாக இருக்கலாம்.
  • தேர்வு கமிட்டியில் சட்டம் தொடர்பான பின்னணி உடையவர்கள், தலைமை தேர்தல் கமிஷனர், மத்திய கணக்கு தணிக்கை அலுவலக தலைவர், ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல்கள், லோக்பால் அமைப்பில் இருந்து வெளியேறும் உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும்.
  • லோக்பால் அமைப்பின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்த எந்த தடையும் இருக்க கூடாது.
  • ஓராண்டிற்குள் புலனாய்வை முடிக்க வேண்டும். இது தொடர்பான வழக்கு விசாரணையை அடுத்த ஓராண்டிற்குள் முடிக்க வேண்டும்.
  • ஊழல் நிரூபிக்கப்பட்டால், ஊழலில் தொடர்புடைய அனைவரிடமிருந்தும் இழப்பீடு பெறப்பட்டு, அரசு இழப்பைச் சரிகட்ட வேண்டும்.
நன்றி:
தினமலர் முதல் பக்கம் » பொது செய்தி »இந்தியா
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2011,23:21 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=220515
jayaram10g

Sunday, April 03, 2011

அன்புள்ள தமிழக வாக்காளர்களே! ஓர் வேண்டுகோள்!!

ஏப்ரல் திங்களில் தமிழகம் சட்டமன்றத்திற்கான தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது.

நாட்டு மக்களின் கண்ணீரையும் ரத்தத்தையும் காவுகேட்டு மக்களின் வரிப்பணத்தில் மஞ்சள் குளித்து தன்னையும் பல்கி பெருக்கிக் கிடக்கும் தனது குடும்பதையும் வாழ வைத்துக் கொண்டு இருக்கிற ஒரு அபூர்வப் பிறவி ஆறாவது முறையாகவும் அன்னைத் தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர, அதற்கான அடிப்படை வேலைகளில் ஆளும் தரப்பினர் இப்போதே ஈடுபடத் துவங்கியுள்ளனர். கொள்ளையடித்துக் குவித்து வைத்திக்கிற கோடிப் பணங்களைக் கொட்டிச் செலவழித்து, வாக்காளர்களை விலைக்கு வாங்கி தமிழ்நாட்டைத் தன் குடும்பத்தின் வேட்டைக்காடாகத் துடிக்கிற சுயநலச் சுனாமிகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசரமும் அவசியமும் ஆகும். வரும் தேர்தலில் குலத் துரோகம் செய்கிற இந்தக் குடும்பத்தை தமிழக வாக்காளர்கள் ஓரங்கட்டாவிட்டால் தமிழகம் சாரம் இழக்கும். சத்தியிழக்கும் வருங்காலச் சந்ததி வாழ்விழக்கும் தமிழ்க் குடும்பங்கள் தத்தளிக்கும் தடுமாறும். ஒரு குடும்பம் ஓகோ என்றிருக்கும். ஆகா நம் நிலைமை இப்படி ஆகி விட்டதே என்று நாளெல்லாம் கண்ணீர் வடிக்க வேண்டியது வரும். கவலைப்பட வேண்டியது வரும்.

அதிகாரத்திற்கு வருகிறவர்களுக்கு அந்த நாளில் அண்ணல் காந்தியடிகள் சொன்ன அறிவுரையை இந்த நாளில் நினைவு படுத்துவோம். 'ஏழ்மையை அகற்றும் பணியில் ஈடுபடுவதற்காகவே இந்தப் பதவிகள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதை மறவாமல் செயற்படுங்கள்' நாட்டு மக்களின் வரிப்பணத்தில் தான் ஒரு அரசாங்கம் இயங்குகிறது என்பதை அண்ணா அவர்கள் மதுரைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாப் பேருரையில் தெளிவுபடுத்தினார். "முழுவயிறு காணாதார் முதுகெலும்பு முறிய பாடுபடுவோர், வாழ்வின் சுவைகாணார், வலியோரின் பகடைக் காய்கள், ஓடப்பர் - இவரெல்லாம் தருகின்ற வரிப்பணம்தான் கோட்டையாக் கொடிமரமாய் பாதையாய் பகட்டுகளாய் அமல் நடத்தும் அதிகாரிகளாய் அறிவு பெற அமையும் கூட்டங்களாய் அமைகின்றன" என்றார் அறிஞர் அண்ணா. அண்ணல் காந்தியடிகளின் அறிவுரையும், அறிஞர் அண்ணாவின் வழிகாட்டுதலையும் இன்றைய ஆட்சியாளர்கள் கருத்தில் கொண்டு இருந்தால் நாடு நாடாக இருந்திருக்கும். காடாக மாறியிருக்காது கவலை மிகுந்திருக்காது.

வியாபாரம் செய்ய வந்தவர்கள் அரசியல் செய்தார்கள். அரசியல் செய்ய வந்தவர்கள் வியாபாரம் செய்கிறார்கள் என்றார் கவிஞர் வைரமுத்து. யாரை மனதில் வைத்து இப்படி எழுதினாரோ தெரியவில்லை. ஆனால் ஆதாயச் சூதாடிகளால் இன்று அரசியல் வியாபாரம் ஆகி விட்டது. விதியற்றவர்களாய், கதியற்றவர்களாய் மக்கள். இந்த மதோன்மத்தர்களின் கோரப்பிடியில் இருந்து நாட்டை மீட்க வாக்குச்சீட்டு என்ற ஆயுதத்தை ஏந்த மக்கள் அணியமாக வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

ஒரு கிண்ணத்தில் மட்டுமே அமுதம் நிரம்பி வழிகிறது. ஒரு தோட்டத்தில் மட்டுமே தென்றல் காற்று திரும்பத்திரும்ப வீசுகிறது. ஒரு நத்தவனத்தில் மட்டுமே மலர்கள் மலர்ந்து சிரிக்கின்றன. ஒரு கருணை இல்லாத குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியில் மந்தகாசப் புன்னகையில் மல்லாந்து கிடக்கிறது.

ஒரு குடும்ப ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் எதிராக குவலயத்தில் அங்கிங்கெனாதபடி புரட்சிகள் சூல்கொண்டு வருகின்றன. நைல் நதிக்கரையில். நாகரீகத்தின் தொட்டில் பூமியில், பிரமிடுகளின் தேசத்தில், அய்யாயிரம் ஆண்டு காலத்திற்கு முன்னால் ரோம சாம்ராஜ்யத்திற்கு தானியங்கள் வழங்கிய வளமார்ந்த பூமியில் நாசரின் எகிப்தில் முப்பது ஆண்டுகாலம் எகிப்து மக்களை ஏய்த்து, ஏமாற்றி, உண்டு கொழுத்து, உல்லாசம் அனுபவித்து, ஊரெல்லாம் வளைத்துப்போட்ட ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் வெசுவியஸ் எரிமலையாய் வெடிக்கிறார்கள் ஊடகத்தில் ஹோஸ்னி முபாரக்கின் அத்துமீறலை அம்பலப்படுத்திய காலித் சையத் என்ற இளைஞன் கொலை செய்யப்பட்டான்.

காலித் சையத்தின் மரணம் எகிப்து மக்களின் நெஞ்சத்தில் ரணத்தை உருவாக்கியது. அது போர்குணமாக உருவெடுத்தது புகழ்பெற்ற தாரீர் சதுக்கத்தில் இருபது லட்சம் மக்கள் பதினெட்டு நாட்கள் திரண்டார்கள். நாயே நாட்டைவிட்டு வெளியேறு என்று திசையதிர மூரி முழங்கினார்கள். மக்களின் உள்ளத்தில் பொங்கியெழுந்த கோபத்திற்கு ஈடு கொடுக்க முடியாத ஹோஸ்னி முபாரக் குடும்பத்தோடு கெய்ரோவில் இருந்து வெளியேறி விட்டான். எகிப்தில் நின்று நிலவிய ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. மக்களின் விழாவிற்கு விடை கிடைத்தது.

எகிப்தில் புரட்சி வெடித்ததற்கும் ஹோஸ்னி முபாரக் வெளியேறியதற்கும் டுனீசியாவில் ஏற்பட்ட புரட்சி தான் காரணமாக அமைந்தது. 72 வயது நிரம்பிய டுனீசியாவின் அதிபர் பெண் அலியின் ஆட்சியில் டுனீசியாவில் நொந்தார்கள். நொறுங்கிப் போனார்கள். மக்கள் அதலபாதாளத்தில் தூக்கி வீசப்பட்டார்கள். பெண் அலியின் குடும்பமோ ஆகாயத்தையே வசமாக்கிவிட்டது. டுனீசியாவிலும் புரட்சி பூத்தது. புதுமை சிலிர்த்தது. கொற்றத்தில் இருந்த கொடியவன் பெண் அலிக்கு எதிராக முகமதுவுவாசி என்ற இளைஞன் தற்கொ¬லை செய்து மாண்டான். அந்த இளைஞனின் சாவுதான் பெண் அலியின் ஆட்சியைக் காவு கேட்டது. டுனீசியாவில் இருந்து பெண் அலியும் வெளியேறி விட்டான் குடும்பத்துடன்.

பனாமாவில் இப்போது சலேவிற்கு எதிராக புரட்சி வெடித்து விட்டது. சலேவும் தாக்குப்பிடிக்க மாட்டான். அவன் ஆட்சியும் தரைமட்டமாகிவிடும் என்ற செய்திகள் காதில் தோனாய்ப் பாய்கிறது.

விடுதலை உணர்ச்சிக்கு வித்தூன்றிய மாமனிதன் உமர் முக்தார் உலவிய லிபியாவிலும் மக்கள் கிளர்ச்சிக் கொழுந்து விட்டு எரிகிறது. கடாபிக்கு எதிராக மக்கள் களத்திற்கு வந்து விட்டார்கள். லிபியாவின் தலைநகர் டிரிபோலி போர்க்களமாக விட்டது. கடாபிக்கு எதிராக மக்கள் செங்குருதி சிந்த சித்தமாகி விட்டார்கள். பெங்காசி நகரம் புரட்சியாளர்கள் வசமாகி விட்டது. பொது மக்கள் காங்கிரஸ் எனும் லிபியாவின் பார்லிமெண்ட் தீக்கரையாக்கப்பட்டு விட்டது. பல நகரங்களில் அரசு அலுவலகங்கள் தீயில் தீர்ந்து கொண்டிருக்கின்றன. பெங்காசி விமானப் படைத்தளத்தைப் புரட்சியார்கள் உடைத்து நொறுக்கி விட்டார்கள். தலைநகர் டிரிபோலியில் உள்ள விமான நிலையமும் புரட்சியாளர்களால் இழுத்து மூடப்பட்டுவிட்டது. சிட்ரோ, டொப்ருக், மிஸ்ரட்டா, கோம்ஸ், டர்கவுனா, ஜென்டன், அல்ஜாவியா, ஜவாரா போன்ற இடங்களில் எல்லாம் கலகக்காரர்கள் களமிறங்கி விட்டார்கள். புரட்சியாளர்கள் மீதும் தாயகத்து மண்மீதும் கொடுங்கோலன் இராஜபட்சேயைப் போல ஏவுகணைத் தாக்குதலுக்கு இராணுவத்தை ஏவி விட்ட பிறகும் புரட்சித் தீ எல்லாத் திசைக்கும் பரவுவதாக செய்திகள் வருகிறது. முட்டாள் கடாபியும் லிபியாவை விட்டு வெளியேற வேண்டிய நேரம் வந்து விட்டது. ஐ.நாவின் மனித உரிமைப்பிரிவின் தலைவன் நவிபிள்ளை கடாபியின் மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்கிற அளவிற்குக் கடாபியின் நிலைமை கவலைக்கிடமாகி விட்டது.

மத்திய கிழக்கில் வளம் நிறைந்த பக்ரைனிலும் புரட்சி பூத்துக் கிடக்கிறது. பக்ரைன் தலைநகர் மனாமாவின் 'பேர்ள்' சதுக்கத்தில் அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் மன்னராட்சிக்கு எதிராக மண்ணும் விண்ணும் அதிர அன்றாடம் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

மன்னராட்சி காலூன்றி இருக்கிற அரபுச் சீமையில் மக்கள் புரட்சி வெல்லுமானால் மக்களாட்சித் தத்துவம் மலர்குலுங்கும் மண்ணில் புரட்சி வெடிக்க அதிக நேரமாகாது. அதற்கான தருணம்தான் வருகிற பொதுத் தேர்தல் இந்தத் தேர்தலின் முடிவில் மாறுதலும் சாத்தியாகும். மக்களுக்கு ஆறுதலும் சாத்தியமாகும்.

தொலை நோக்குப் பார்வையைத் தொலைத்துவிட்டு வளமான எதிர்காலத்திற்கு வழி காணாமல் நிகழ்காலத்தின் கதவடைக்கிற கருணாநிதியின் காலம் தமிழக வரலாற்றில் கசப்பான காலம் களப்பிரர் காலத்தைத் தான் நினைவு படுத்துகிறது. நெஞ்சு சுடுகிறது.

மக்களுக்கு மீன்பிடிக்கக் கற்றுக் கொடுக்காமல் மீனைக் கொடுத்து மக்களை ஏய்க்கிற இந்த ஆட்சியாளர்கள் தொடர்ந்து மக்களை ஏய்க்கவும் ஏமாற்றவும் திட்டமிடுகிறார்கள். மலைவாசியும் தொட முடியாத தூரத்தில் விலைவாசி. இதை நீ யோசி என்று சொன்னால் மக்களுக்கு வாங்கும் சக்தி வந்து விட்டது என்று முதலமைச்சர் பிலாக்கணம் பாடுகிறார். தன்மக்களைச் சொல்கிறாரா? தமிழ்நாட்டு மக்களைச் சொல்லுகிறாரா? என்பது தான் தெரியவில்லை.

ஜனநாயக பண்புக்குப் பந்தி வைக்க குடவோலை முறைகண்ட பழந்தமிழகத்தில் கருணாநிதியின் ஆட்சியில் ஜனநாயகம் கட்சியிலும் ஆட்சியிலும் சிரச்சேதம் செய்யப்பட்டு விட்டது. கட்சியின் பொருளாளர், துணைமுதல்வர் என்னும் இடத்திற்கு ஸ்டாலினைக் கொண்டு வந்த பிறகும் இளைஞரணிச் செயலாளர் பதவிக்கு இன்னொருவருக்கு விட்டுக்கொடுக்கக் கருணாநிதிக்கும் மனமில்லை. ஸ்டாலினுக்கும் குணமில்லை. தடாலடி அரசியல் நடத்துகிற கருணாநிதிக்கு மகனாகப் பிறந்தார். என்பதை விட வேறு எந்த எந்தத் தகுதியும் இல்லாத அழகிரியை மத்திய மந்திரியாக்கிய அவலத்தை எங்கேபோய் சொல்வது அறிஞர் அண்ணாவும் அவர்தம்பி வைகோவும் அலங்கரித்த மாநிலங்களவையில் கனிமொழியை உட்கார வைத்ததன் மூலம் மாநிலங்கள் அவையே அழுக்காகிவிட்டது. கருணாநிதி குடும்பத்தைச் சார்ந்த ஆறுக்கும் மேற்பட்ட அதிகாரமையங்கள் தமிழகத்தைக் கயிறு போட்டுத்தின்று தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு மலிவான, மலினமான, கீழ்த்தரமான, கேவலமான, கோரமான குடும்ப ஆட்சியைக் குவலயத்தில் வேறெங்கும் பார்க்க முடியாது. இவர்களை இன்னும் ஏன் இந்த மண்ணில் ஆள அனுமதிக்க வேண்டும் என்கிற கேள்வி தமிழக வாக்களார் மத்தியில் இன்று எழுந்து விட்டது. உண்மையைக்கண்டு உள்ளுக்குள் ஒடுங்கிவிடாமல் ஊரெல்லாம் மக்கள் சீறியெழத் தொடங்கிவிட்டார்கள். அச்சமும் பேழமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற்கொண்ட ஊமை ஜனங்கள் தான் தமிழ் நாட்டு மக்கள் எனக் கருணாநிதி கணக்கிடுவாரேயானால் கருணாநிதியின் கணக்கை முடிக்க மக்கள் கணின்று எழுந்த விட்டார்கள் என்பதை போகப் போகப் புரிந்து கொள்வார்கள் ஆட்சியாளர்கள்.

ஒளி மிகுந்த தமிழகத்தை இருட்டில் தள்ளி நூற்றுக்கும் மேற்பட்ட சிறுதொழில் குறுதொழிலுக்குக் கொள்ளி வைத்த ஆட்சிதான் கருணாநிதி ஆட்சி. வீட்டுக்கு ஒரு குடிகாரணை உற்பத்திசெய்து தாயின் கையில் 1 ரூபாய்க்கு அரிசியையும் தகப்பன் கையில் ரூ.100/- சாராயத்தையும் கொடுத்தது சாதனையா? வேதனையா?

பாதுகாப்பு வளையத்துக்குள் பத்திரமாக இருந்து ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளரையே அவர் வீட்டு வாசலில் வெட்டிக் கொல்லுகிறார்கள் என்றால் உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மட்டுமல்லாது உயர்நீதிமன்ற நீதியரசர்களும் இந்த நீசனின் ஆட்சியில் தாக்கப்படுகிறார்கள் என்றால் ஆழ்வார்க்குறிச்சியில் பட்டப்பகலில் மந்திரிகள் முன்னிலையிலேயே சப்-இன்ஸ்பெக்டர் வெட்டி வீழ்த்தப்படுகிறார்கள் என்றால் காலையில் பட்டாம் பூச்சி போல் பள்ளிக்குப் பறந்து சென்ற குழந்தை மாலையில் வீடு திரும்புவதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்றால் இந்தியாவில் இதைவிட இழிவான கேடு கெட்ட ஆட்சி வேறெங்கும் இல்லை.

ஆளப்படுகிற மக்கள் வசதியாக வாழ வேண்டும் என்றால் அவர்கள் வீட்டில் வசந்தம் கோலம்போட வேண்டும் என்றால் ஆளுகிறவன் ஏழையாக இருக்க வேண்டும். இங்கே ஆளப்படுகிற இலவசத்திற்குக் காத்திருக்கிற யாசகர்கள் ஆளுகிறவர்கள் என்ஜினியர்கள் கல்லூரி தாளாளர்கள். மேலாளர் நாகரிகம் நிலவிய நாட்டில் இப்போது தாளாளர் நாகரிகம் தலைதூக்கி விட்டது.

இனப்படுகொலை நிகழ்த்திய இந்திய எஜமானியின் காலில் விழுந்து கிடக்கும் இந்த அடிமைக் கூட்டத்தை, அலைவரிசையில் தன் கைவரிசையைக் காட்டி தேசப்பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக விளங்கும் இந்த ஆபத்தான மனிதர்களை, பட்டப்பகலையே பட்டாபோடும் இந்த பகல் கொள்ளையர்களை, வலிக்காமலேயே ரத்தம் உறிஞ்சுகிற இந்த நவீனரக ஓட்டுண்ணிகளை, பண்பாட்டு அடித்தளத்தின் மீது அறிவிக்கப்படாத யுத்தத்தைத் தொடுத்திருக்கிற குலக்கேடர்களை வேரோடும் தூரோடும் வெட்டிச் சாய்க்கிற வேள்வியில் வெற்றி பெற்றால் தான் நாடு நாடாக இருக்கும்.

ஜனநாயக தேவதையின் துகிலுரிந்த இந்த நவீன துச்சாதனர்களின் இருந்து, 1,01,541/- கோடிக்கடன் வாங்கி நிர்வாகத்தை நிர்வாணமாக்கிய விவேகம் கெட்டவர்களிடம் இருந்து, தீர்ந்து போகாத திராவிட இயக்க இலட்சியங்களைக் குழிதோண்டிப் புதைக்கத் துடிக்கும் கொள்கைத் துரோகிகளிடம் இருந்து, வாரிசு அரசியல் என்னும் பாரிச வாயுவால் பாதிக்கப்பட்ட மரபார்ந்த தமிழகத்தின் பெருமையை மீட்டெடுப்பதற்கு தமிழர்களே தயாராகுங்கள். தாமதித்தால் எதுவும் நேராமலும் போகலாம். நல்ல நேரமிது நழுவ விடாதீர்கள்.
நன்றி: நாஞ்சில் சம்பத் மற்றும் தினமலர், http://www.dinamalar.com/News_Detail.asp?Id=198939